Rs 16 lakh ootti dams to requirements of the feed

நீலகிரி

ஊட்டியின் தண்ணீத் தேவைகளை பூர்த்தி செய்யும் அணிகள் ரூ.16 இலட்சத்தில் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடந்து வருவதை நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கர் நேரில் ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சிக்கு உள்பட்ட 36 வார்டுகளிலும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஊட்டியின் குளிர்ச்சிக்காகவே ஆண்டுதோறும் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், நூற்றுக்கணக்கான உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளன.

இப்படி சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஊட்டியின் தண்ணீர் தேவையை பல்வேறு அணைகள் பூர்த்தி செய்து வருகின்றன. அதிலும், குறிப்பாக பார்சன்ஸ்வேலி அணை, மார்லிமந்து அணை, கோடப்பமந்து அப்பர் அணை, கோரிசோலா அணை, தொட்டபெட்டா அப்பர் அணை உள்பட பல்வேறு அணைகள் உள்ளன.

தமிழகத்தில் உள்ள அணைகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதன்படி ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான மார்லிமந்து அணை, கோடப்பமந்து அப்பர் அணை மற்றும் கோரிசோலா அணைகளை தூர்வாரும் பணி கடந்த வாரம் தொடங்கியது.

இந்தத் தூர்வாரும் பணிகளுக்காக நகராட்சிச் சார்பில் ரூ.16 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கர் மார்லிமந்து அணை மற்றும் கோரிசோலா அணைகளில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் அதிகாரிகளிடம், “தென்மேற்கு பருவமழைக் காலங்களில் அணைகளில் அதிகளவில் தண்ணீரைச் சேமித்து வைக்க வேண்டும். இதனால் அணைகளை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து ஆட்சியர் சங்கர் செய்தியாளர்களிடம் கூறியது:

“9.60 ஏக்கர் பரப்பளவு கொண்ட மார்லிமந்து அணை மற்றும் 2.2 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோரிசோலா அணையை பொக்லைன் எந்திரங்கள் கொண்டு மண்ணை தோண்டி, தூர்வாரும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியின் மூலம் அணையில் 2 ஆயிரத்து 100 கனஅடி தண்ணீரை அதிகமாக சேமித்து வைக்க முடியும்.

அணைகளில் தூர்வாரப்பட்ட மண் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்றதாகும். எனவே, விவசாயிகள் ஊட்டி தாசில்தாரிடம் அனுமதிப் பெற்று, இந்த மண்ணை பெற்றுச் சென்று பயனடையலாம்” என்று அவர் கூறினார்.