இரயில் பயணிகளிடம் கைதட்டி பணம்கேட்ட திருநங்கைகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்...
வேலூர்
காட்பாடி வழியாகச் செல்லும் இரயில்களில் பயணிகளிடம் கைதட்டி பணம்கேட்டு தினமும் தொல்லை கொடுத்தும், பணம் தரவில்லை என்றால் தகாத வார்த்தைகளால திட்டியும்வந்த 37 திருநங்கைகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், காட்பாடி வழியாகச் செல்லும் வடமாநில இரயில்களில் திருநங்கைகள் கும்பல் கும்பலாகச் சென்று பயணிகளிடம் கைதட்டி பணம்கேட்டு தொல்லை கொடுக்கின்றனர் என்று தொடர்ந்து புகார்கள் வந்தன.
அதிலும், குடியாத்தம் மேல்பட்டியிலிருந்து அரக்கோணம் இரயில் நிலையம் வரையில் பயணிகள் அதிகளவில் சங்கடத்திற்கு உள்ளாகின்றனர். மேலே கை வைப்பதும், பணம் தராவிட்டால் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதும் என பல்வேறு சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
திருநங்கைகளின் இந்த அத்துமீறலால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான இரயில் பயணிகள், இதுகுறித்து இரயில்வே பாதுகாப்புப் படை காவலாளர்களிடம் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து ஆய்வாளர் செந்தில்ராஜ் தலைமையில் காவலாளர்கள தினமும் இரயில்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட சோதனையில், "இரயில்வே விதிகளை மீறி பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தது"",
"டிக்கெட் பெறாமல் பயணம் செய்தது",
"பயணிகளை தகாத வார்த்தைகளில் திட்டியது" உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 37 திருநங்கைகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இரயில்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் காவலாளர்கள் தெரிவித்துள்ளனர்.