Rs 1 lakh fine for plastic warehouse for dengue mosquito production
திருவாரூர்

திருவாரூரில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த பிளாஸ்டிக் கிடங்குக்கு ரூ.1 இலட்சம் அபராதம் விதித்து ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் உத்தரவிட்டார்.
திருவாரூர் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன்படி, நேற்று காலை முதல் திருவாரூர் மற்றும் பல்வேறு இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் அருகேயுள்ள அரசவனங்காடு பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கு ஒன்றில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு லாரி டயரில் டெங்கு கொசுப் புழுக்கள் இருப்பதைப் பார்த்தார். இதனையடுத்து, அந்த நிறுவனத்திற்கு ரூ.1 இலட்சம் அபராதம் விதித்தார்.
தண்டலை பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஆய்வு செய்தபோது, அங்கு சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்கும் நிலை இருப்பதைக் கண்டறிந்து பங்க் உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுத்தார்.
“திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் லாரி டயரில் டெங்கு கொசுக்கள் இருப்பதைக் கண்டறிந்து 700 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது” என்று ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
