ஓபிஎஸ் மகனின் நண்பர் என கூறி ரூ.1 கோடி மோசடி...!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனின் நண்பன் என கூறி டாக்டர் சீட் வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் மற்றும் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி என ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி செய்தது தெரிந்தது.
சென்னை அடுத்த நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் 2வது வடக்கு பிரதான சாலையை சேர்ந்தவர் சீனிவாசலு (24). இவர், நேற்று நீலாங்கரை போலீசில் ஒரு புகார் செய்தார். அதில், 'நீலாங்கரை சன்ரைஸ் அவன்யூவில் வசிக்கும் சரவணகுமார் என்பவர், தேசிய நெடுஞ்சாலையில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடம் ரூ.12 லட்சம் வாங்கினார். வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திருப்பி தர ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து சரவணகுமார் வீட்டுக்கு விரைந்தார். அங்கு, ஒரு பகுதியில் விலையுயர்ந்த 5 நாய்கள் கட்டி போடப்பட்டிருந்தது. அவைகள், போலீசாரை பார்த்து குரைத்தது. நாய்களின் சத்தம் கேட்டு வெளியே வந்த சரவணகுமாரை, காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனின் நண்பன் என கூறி டாக்டர் சீட் வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் மற்றும் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி என ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி செய்தது தெரிந்தது.
இதையடுத்து போலீசார், அவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். வீட்டில், ரூ.1 லட்சம் மதிப்புடைய 15 கைக்கடிகாரம் இருந்தது. அவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், 11 மாதங்களாக வீட்டு வாடகை மற்றும் வேலைக்காரிக்கு சம்பளம் கொடுக்காதது தெரியவந்தது. இதையடுத்து சரவணகுமாரை கைது செய்து ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.