சென்னை ஐஸ் ஹவுசில் அடகு கடைக்காரர் வீட்டில் புகுந்த வடமாநில ஆசாமிகள் துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வேலைக்காரி சத்தம் போட்டதால் பொதுமக்கள் திரண்டதில் ஒருவன் சிக்கினான்.

ஐஸ் ஹவுஸ் ஜானிஜான் கான் சாலையில் வசிப்பவர் முன்னா லால்.இவர் சொந்தமாக அடகு கடை வைத்துள்ளார்.

கடையும் வீடும் ஒன்றாக இருக்கும். இன்று காலை 10 மணியளவில் இவர் வீட்டுக்கு மூன்று பேர் வந்துள்ளனர்.நகைகளை அடகு வைப்பது போல் முன்னா லாலிடம் பேசியுள்ளனர். பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென துப்பாக்கியை எடுத்து காட்டி முன்னா லாலை மிரட்டியுள்ளனர்.

துப்பாக்கி முனையில் கடையில் உள்ள தங்க நகைகள் அனைத்தையும் பறித்துள்ளனர்.பின்னர் அதனை நகைகளையும் மூட்டை கட்டி எடுத்து செல்ல தயாராக இருந்துள்ளனர்.

அப்போது வீட்டுக்குள் இருந்த வேலைக்காரி வனிதா இதை பார்த்து விட்டு திருடன் திருடன் என்று கூச்சலிட்டுள்ளார்.

அவரை கொள்ளைகாரர்கள் தாக்க முயற்சித்துள்ளனர். ஆனாலும் வனிதா தொடர்ந்து கூச்சல் போடவே பொதுமக்கள் கூடியுள்ளனர்

இதை பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து நகைகளை விட்டு விட்டு தப்பியோடினர்.

ஆனால் அவர்களில் ஒருவனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.மற்ற 2 பேரும் தப்பி ஓடி விட்டனர்.பிடிப்பட்ட கொள்ளையனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்கு விசாரணையில் அவன் பெயர் ரவிக்குமார் சிங் என்பதும் அவர்கள் மூவரும் உத்தரப்ரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. 3 பேரும் துப்பாக்கிகள் அரிவாள்களை எடுத்து வந்தது தெரிய வந்தது.

சிக்கி கொண்ட ரவிக்குமாரிடம் இருந்து 3 துப்பாக்கிகள் அரிவாள்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயற்சி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.