கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, மூதாட்டி மற்றும் அவரது பேத்திகள் வீட்டில் தனியாக இருந்தபோது, ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டதால் கொள்ளையர்கள் தப்பி ஓடினர். 

திருவண்ணாமலை மாவட்டம் சானார்பாளையம், மலைப்பாம்படி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி கீதா. இவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேகேப்பள்ளியில் உள்ள பஞ்சாயத்து அலுவலக சாலையில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சந்தியா, திவ்யா, மீனா என 3 பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணம் முடிந்து அதே பகுதியில் வெவ்வேறு இடத்தில் வசித்து வருகின்றனர்.

கடந்த 7ம் தேதி இரவு 8.30 மணியளவில் கீதாவின் கணவர் லோகநாதன், உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டார். இதனால் தனது பெரியமகள் சந்தியாவின் 2 பெண் குழந்தைகளையும் துணைக்கு கீதா தனது வீட்டிற்கு அழைத்து சென்று தூங்கியுள்ளனர். அன்று நள்ளிரவு அதிகாலை 1 மணியளவில், வீட்டின் இரும்பு கேட்டை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது கீதா சென்று யாருடா நீங்க, என்னடா பண்றீங்க என சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அந்த கும்பல் சென்றுவிட்டது. பின்னர் அரை மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் வந்த அந்த கும்பல் ஸ்குருடிரைவர், கட்டிங் பிளேயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இரும்பு கேட்டை உடைத்துள்ளது.

இதனால் பதறிப்போன கீதா தனது 3 மகள்களுக்கும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு யாரோ கதவ உடைக்கிறாங்க சீக்கிரம் வாங்க என கதறியுள்ளார். மேலும் அலறி கூச்சலிட்டுள்ளார். அதற்குள் முகத்தை துணிகளால் மறைத்து கொண்டும், மாஸ்க் மற்றும் தலையில் குல்லா அணிந்திருந்த கும்பல் கதவை வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்து கீதாவின் கழுத்தை நெறித்து, உன்னை கொலை செய்துவிடுவோம் மரியாதையாக வீட்டில் இருக்கும் பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொடு என மிரட்டியுள்ளனர். அங்கு தூங்கி கொண்டிருந்த 2 பேத்திகளும் சத்தம் கேட்டு விழித்துக்கொண்டு ஆயா ஆயா என அழத்தொடங்கியுள்ளனர்.

கொள்ளையர்களோ கீதாவின் கழுத்தை நெறித்தவாரே, ஸ்குருடிரைவர் வைத்து கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். அப்போது கீதா நாங்கள் கூலி வேலைக்கு செல்பவர்கள் எங்களை விட்டு விடுங்க, எனது விட்டுக்காரர் ஒரு நோயாளி, நானும் ஒரு நோயாளி, நாங்கள் வாங்கும் சம்பளம் மருந்து மாத்திரைகளுக்கே சரியாகி விடுகிறது. வீட்டில் எதுவுமில்லை இருந்தால் எடுத்து கொள்ளுங்கள் என கெஞ்சியுள்ளார். அதற்குள் கீதாவின் மருமகன்கள், எதிர் வீட்டில் உள்ளவர்கள் என 10க்கும் மேற்ப்பட்டோர் கீதாவின் வீட்டின் முன்பு திரண்டனர். உடனடியாக அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. பின்னர் இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் 8ம் தேதி காலை புகாரை வாங்கி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் அந்த கும்பல் அன்று இரவே பேகேப்பள்ளி பகுதியில் கையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் காவல்துறையின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பேகேப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் சுற்றிதிரிவதால் இரவு நேரங்களில் யாராவது கதவை தட்டினால், கதவை திறக்க வேண்டாம் அறிவுறுத்தியுள்ளனர். சம்பவம் நடத்து 8 நாட்களாகியும் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.