சிவகங்கையில் வருவாய்த் துறை அலுவலர்கள் திடீர் கூட்டம்; அனைத்து அதிகாரிகளையும் இடமாற்றம் செய்யணுமாம்...
சிவகங்கையில் நடைப்பெற்ற தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலகில் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேல் வேலை செய்யும் அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
தமிழ்நாடு வருவாய்த் துறை குரூப் -2 நேரடி நியமன அலுவலர்கள் சங்க செயற்குழு மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று சிவகங்கையில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் சையது அபுதாகிர் தலைமை வகித்தார்.
இதில், மாநிலப் பொதுச் செயலாளர் தருமராஜ் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் நாகேந்திரமுருகன் வரவேற்றுப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், "கடந்த 2017-ஆம் ஆண்டு துணை வட்டாட்சியர் பட்டியல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும்;
மாவட்ட வருவாய் அலகில் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேல் வேலை செய்யும் அனைத்து நிலை அலுவலர்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும்;
துணை வட்டாட்சியர் பதவி உயர்விற்குத் தேவையான வருவாய் ஆய்வாளர் பயிற்சியை ஒரு வருடமாக குறைக்க வேண்டும்;
கன்னியாகுமரியில் உள்ள கல்குளம் வட்டத்தை நிர்வாக நலன் கருதி மூன்றாக பிரிக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபப்ட்டன.
இந்தக் கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் சங்கர், இராமநாதன், பாரதி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். கமரூதின் நன்றித் தெரிவித்து கூட்டத்தை முடித்து வைத்தார்.