மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்ட வருவாய் அதிகாரி; மனுதாரர்கள் மகிழ்ச்சி…
அரியலூரில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் அளிக்கப்பட்ட 51 மனுக்களில் 35 மனுக்களுக்கு, மாவட்ட வருவாய் அதிகாரியால் உடனடியாக தீர்வு காணப்பட்டதால் மனுதாரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மீதமுள்ள 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் இடங்கண்ணி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் தலைமை தாங்கினார். இதில் வருவாய் ஆய்வாளர் ராஜகோபால் வரவேற்றுப் பேசினார். வட்டாட்சியர் திருமாறன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டு உடனடி தீர்வளிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்திராகாந்தி விதவைகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரூ.12 ஆயிரத்துக்கான காசோலை, வேளாண்மை துறையின் மூலம் 6 பேருக்கு ரூ.7 ஆயிரத்து 100 மதிப்பிலான இடுபொருட்கள், 20 பேருக்கு ரூ.2 இலட்சம் மதிப்பில் நத்தம் வீட்டுமனை பட்டா உள்பட மொத்தம் 41 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 50 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த முகாமில் வருவாய் துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டங்கள், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 51 மனுக்கள் பெறப்பட்டன.
அதில், 35 மனுக்கள் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதனால், மனுதாரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மீதமுள்ள 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மேலும், இந்த முகாமில் வேளாண்மை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் நன்றித் தெரிவித்தார்.