30 பேர் கொண்ட மீட்புக்குழு சென்னை வருகை…
வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீட்புப் பணிகளை மேற்கொள்ள திண்டுக்கல்லிலிருந்து 30 பேர் கொண்ட மீட்புக்குழு தனிப்பேருந்து மூலம் சென்னை வந்தது.
வர்தா புயலால் சென்னை மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஊரக வளர்ச்சித் துறை, மின் வாரியம், சுகாதாரத் துறை சார்பில் மீட்புக்குழு அனுப்பப்பட்டு வருகிறது.
அதன்படி திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 30 பேர் கொண்ட குழு, தனி பேருந்து மூலம் புதன்கிழமை புறப்பட்டுச் சென்றது.
குழுவில் துப்புரவுப் பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் செயல்பட வேண்டிய முறை குறித்து, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பெ.திலகவதி எடுத்துரைத்தார்.