Request for Tamil Nadu Government to continue the Insurance Scheme for Livestock ...
கிருஷ்ணகிரி
கால்நடைகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில், "தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆடுகள், மாடுகள், கோழிகள் ஆகிய கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய மத்திய அரசு 50 சதவீதமும், தமிழக அரசு 25 சதவீதமும் என காப்பீடுத் தொகையை வழங்கி வந்தது. மீதமுள்ள தொகையை விவசாயிகள் செலுத்தி வந்தனர்.
இதனால், 30 இலட்சம் கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்பட்டன. இந்தக் காப்பீடு திட்டம் நிறைவடைந்துள்ளது.
இந்தத் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவில்லை எனில், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, திட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்தத் திட்டத்தைப் புதுப்பிக்கப்படும் வரையில், பாதிக்கப்படுவோருக்கு இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசே நேரடியாக வழங்க வேண்டும்" என்று அதில் கூறியுள்ளார்.
தாம் அனுப்பி வைத்த மனுவுக்கு தமிழக அரசிடம் இருந்து நல்ல பதில் வரும் என்று அவர் எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தார்.
