பணம் தரவில்லை என்றால் புகைப்படத்தை வெளியிட்டுவிடுவோம் - தலைமை ஆசிரியையை மிரட்டிய ரிப்போர்ட்டர்...
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் பணம் தரவில்லை என்றால் புகைப்படத்தை வெளியிட்டுவிடுவோம் என்று பள்ளித் தலைமை ஆசிரியையை மிரட்டிய ரிப்போர்ட்டரை காவலாளர்கள் கைது செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, தட்டான்தோப்புவைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மகன் கார்த்திகேயன் (35). இவர் கீழக்கரையில் மாதஇதழ் ஒன்றில் செய்தியாளராக (ரிப்போர்ட்டர்) வேலை செய்து வருகிறார்.
தேவிபட்டினம் பக்கத்தில் இருக்கும் பெரியபட்டினத்தைச் சேர்ந்தவர்கள் ராஜன், நசீர். இவர்கள் இருவரும் தேவிபட்டினம் பகுதியில் வாரஇதழ் ஒன்றில் செய்தியாளர்களாக பணியாற்றுகின்றனர்.
இந்த மூன்று பேரும் சாயல்குடியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை கீதாரமணியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். அதில் அவர்கள், கீதாரமணியிடம், "உங்களின் முறைகேடான புகைப்படங்கள் எங்களிடம் இருக்கிறது. எங்களுக்கு வேண்டிய பணத்தை தரவில்லை என்றால் அவற்றை வெளியிட்டுவிடுவோம்" என்றும் மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில், செல்போனில் பேசியதை பொருட்படுத்தாத தலைமை ஆசிரியை அதனை அப்படியே விட்டுவிட்டார். ஆனால், இந்த செய்தியாளர்கள் மூவரும், தலைமை ஆசிரியை காண நேற்று அவர்கள் பள்ளிக்கு நேரடியாகச் சென்றுவிட்டனர்.
அங்கு அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செய்தியாளர்களுக்கும், தலைமை ஆசிரியைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சாயல்குடி காவல் நிலையத்தில் கீதாரமணி புகார் கொடுத்தார். அதன்பேரில் காவலாளர்கள் விசாரணை நடத்தி கார்த்திகேயனை நேற்று மாலையே கைது செய்தனர். மற்ற இரண்டு செய்தியாளர்களையும் காவலாளர்கள் தேடி வருகின்றனர்.
செய்தியாளர்கள் புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு தலைமை ஆசிரியை மிரட்டிய சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.