வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதில் குளறுபடி; பகிரங்கமாக குற்றம் சாட்டும் திமுக; வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு...
திருப்பூர்
திருப்பூரில் உள்ள உடுமலை ஊராட்சிகளில் ஒன்றிய வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதில் குளறுபடி நடந்துள்ளது என்றும் அதனை சரிசெய்ய வேண்டும் என்றும் திமுகவினர் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் வார்டு மறுவரையறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, திருப்பூர் மாவட்டம், உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் போடிப்பட்டி, கணக்கம்பாளையம், பெரியகோட்டை ஆகியவை பெரிய ஊராட்சிகள் ஆகும்.
இதில் போடிப்பட்டி ஊராட்சியில் உள்ள சில வார்டுகளை பிரித்து வடபூதனம் ஊராட்சியில் சேர்த்துவிட்டு, கணக்கம்பாளையம் ஊராட்சியின் மத்திய பகுதியில் உள்ள வார்டுகளை போடிப்பட்டி ஊராட்சியுடன் இணைத்து ஒன்றிய வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று பல ஊராட்சி பகுதிகளில் ஒன்றிய வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளதில் குளறுபடிகள் உள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் உடுமலை ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ் தலைமையில் தி.மு.க.வினர் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சிகள்) கிருஷ்ணமூர்த்தியிடம் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அந்த மனுவில், "ஊராட்சி பகுதியில் உள்ள வார்டுகளை மற்றொரு ஊராட்சியில் சேர்க்கும்போது வார்டு எல்லைகள் அரசு விதிமுறைகளின்படி பிரிக்கப்படவில்லை.
மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கருத்துகளைக் கேட்காமல் அதிகாரிகள் அவசர கதியில் வரைவு பட்டியல் வெளியிட்டுள்ளனர். வரைவு பட்டியல் மீது கருத்து தெரிவிக்க போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை.
ஒரு ஊராட்சிக்கும், மற்றொரு ஊராட்சிக்கும் சம்பந்தம் இல்லாமல் வார்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒன்றிய கவுன்சில் வார்டு எண் 18-ல் குரல்குட்டை ஊராட்சியோடு அடுத்துள்ள ஆலாம்பாளையம் ஊராட்சியை இணைக்காமல் அதற்கு தொடர்பு இல்லாத குருவப்பநாயக்கனூர் ஊராட்சியை இணைத்துள்ளனர்.
ஒன்றிய கவுன்சில் வார்டு எண்.9-ல் ராகல்பாவி ஊராட்சி அருகில் உள்ள ஊராட்சி வார்டுகளை இணைக்காமல், தொடர்பு இல்லாத பெரிய பாப்பனூத்து ஊராட்சி வார்டுகளை இணைத்துள்ளனர். இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.