தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு? அனைத்து கட்சி மாணவர் அமைப்பு வலியுறுத்தல்...
கிருஷ்ணகிரி
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து கட்சி மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கிருஷ்ணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், அனைத்து கட்சி மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நீட் தேர்விற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் செந்தில் தலைமை வகித்தார்.
மேற்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் சத்யா, துணை அமைப்பாளர் மகேந்திரன், திராவிடர் கழக மாணவர் அணி அமைப்பாளர் சதீஷ்குமார், மண்டல இளைஞர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், சமூக நீதி இயக்க பொறுப்பாளர் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் திராவிடமணி பங்கேற்று கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன் கண்டனவுரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, "நீட் தேர்விற்கு எதிராகவும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தியும்" கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
இதில் ஏராளமானவர்கள் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.