சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு உறவினர்கள் எதிர்ப்பு; காதல் கணவனை கரம் பிடித்த சுவாரசியம்...
திருவண்ணாமலை
திருவண்ணாமலை சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட பெண் அவரது உறவினர்கள் எதிர்த்தபோதும் காதல் கணவன் தான் வேண்டும் என்று உறுதியாக இருந்து காவலாளர்களின் துணையோடு கணவனை கரம் பிடித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் தமிழ்செல்வன் (21). இவர் பட்டதாரி. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
போளூர் அல்லியந்தல் பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மோகன் என்பவருடைய மகள் சங்கவி (19). இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை வீட்டிலிருந்து வெளியேறிய சங்கவியும் தமிழ்செல்வனும் 13-ஆம் தேதி மேல்மருவத்தூரில் திருமணம் செய்து கொண்டனர்.
இதனிடையில் சங்கவியை காணவில்லை என்று அவருடைய பெற்றோர் போளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த காவலாளர்கள் விசாரணை நடத்தினர்.
விசாரணை ஒருபக்க நடந்துக் கொண்டிருக்கும்போதே 15-ஆம் தேதி தமிழ்செல்வனும், சங்கவியும் போளூர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையிலான காவலாளர்கள் காதல் ஜோடியிடம் விசாரித்தனர்.
அவர்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்களை மாஜிஸ்திரேட்டு முன்பு ஒப்படைப்பதற்காக திருவண்ணாமலையில் உள்ள மாஜிஸ்திரேட்டு குடியிருப்புக்கு அழைத்து வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சங்கவியின் உறவினர்கள் குடியிருப்புக்கு வந்து முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து காவலாளர்கள் காதல் ஜோடியை போளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் போளூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடிகளிடம் காவலாளர்கள் விசாரித்தனர்.
அங்கு வந்த சங்கவியின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால், சங்கவியின் உறவினர்களை காவலாளர்கள் அங்கிருந்து விரட்டி அடித்தனர்.
தமிழ்செல்வனுடனே வாழ்வேன் என்று சங்கவி உறுதியாக கூறியதால் அவர்கள் இருவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு சங்கவியை, தமிழ்செல்வனுடன் காவலாளர்கள் அனுப்பி வைத்தனர்.