பணத்த கட்டிட்டு உடலை வாங்கிக்கோங்க… ஆத்திரமடைந்த உறவினர்கள்… ஓசூர் மருத்துவமனையில் பரபரப்பு!!
ஓசூரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்த நிலையில் பணத்தை கட்டிவிட்டு உடலை வாங்கிச்செல்லுமாறு கூறிய மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓசூரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்த நிலையில் பணத்தை கட்டிவிட்டு உடலை வாங்கிச்செல்லுமாறு கூறிய மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓசூர் ராயக்கோட்டை சாலை ராஜகணபதி நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் சண்முகம். இவரது மனைவி சரஸ்வதி. 63 வயதான இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த 3 ஆம் தேதி காலை ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி ஆஞ்சியோகிராம் செய்துள்ளனர். மருத்துவ சிகிச்சையில் இருக்கும்போதே இரண்டாவது முறையும் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு ஹார்ட் அட்டாக் வந்துள்ளது.
இதனையடுத்து அவர், நேற்று மாலை 3 மணியளவில் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து உறவினர்கள் மருத்துவமனையில் பணம் என்ற குறிக்கோளுடன் சேவை செய்வதாகவும், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனவும் தெரிவித்து மருத்துவமனை முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 3 லட்சத்து 23 ஆயிரத்தை செலுத்திவிட்டு சடலத்தை பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவமனை கூறுவதாகவும் உயிரிழந்த சரஸ்வதியின் உறவினர்கள் தெரிவித்தனர். இதுக்குறித்து பேசிய உயிரிழந்த சரஸ்வதியின் உறவினர், அதிக பணம் வசூலித்ததாகவும் பணம் என்ற குறிக்கோளுடன் சேவை செய்வதாகவும், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
இதுக்குறித்து பேசிய மருத்துவர், தாங்கள் சிகிச்சை அளித்ததற்கான ஆதரங்களை வைத்துள்ளதாகவும் இதுக்குறித்த அனைத்து காவல்துறையின் முன்பு உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இறந்த சரஸ்வதி உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததன் அடிப்படையில் உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.