சண்டையை தடுத்த சொந்தக்காரர் தலையில் கல்லை போட்டு கொன்ற குடிகாரன்; நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் சண்டையை தடுத்துவிட்ட சொந்தக்காரரின் தலையில் செங்கல்லை போட்டு கொன்ற குடிகாரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை அருகே உள்ள சிவானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் வெடிப்பு ராஜேஷ் என்கிற ராஜேஷ் (34). கூலித்தொழிலாளியான இவருக்கு சாராயம் குடிப்பழக்கம் இருந்தது. இதனால் எப்போதும் யாருடனாவது தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதனால் இவருக்கு சிலருடன் முன்விரோதம் இருந்துவந்தது.
இந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ஆம் தேதி இரவு சாராயம் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராஜேஷின் உறவினர் வேலாயுதம் (60) என்பவர் இதனை தடுத்துள்ளார்.
போதையில் இருந்த ராஜேஷுக்கு இதனால் ஆத்திரம் ஏற்பட்டு, வேலாயுதத்தை கீழே தள்ளி பக்கத்தில் இருந்த பெரிய செங்கல்லை தலையில் போட்டுள்ளார். இதில் வேலாயுதம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து அப்போதைய மகராஜகடை காவல் ஆய்வாளர் ஞானசேகரன் வழக்குப்பதிந்து ராஜேஷை கைது செய்தார்.
இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை முழுமையாக விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா நேற்று தீர்ப்பளித்தார்.
அதில், "கொலை குற்றத்திற்காக ராஜேஷிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2000 அபராதம் விதிக்கப்படுகிறது" என்று கூறினார். அதன்பின்னர் ராஜேஷை கைது செய்த காவலாளர்கள் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.