பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஷரியத் சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும், சேலம் மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள், ஜமா அத்கள் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக மசூதி கூட்டமைப்பின் சேலம் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.அன்வர் தலைமை வகித்தார். ஜாமியா மசூதி செயலாளர் நசீர் அகமத், ஜாமியா மசூதி முத்தவல்லி ஷேக் பரீத், முன்னாள் முத்தவல்லி நாசர்கான் உள்ளிட்டோர பஙகேற்றனர்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர் முஹமது அபுபக்கர், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வந்திருந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தை முடக்கும் வகையில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ. முஹமது அபுபக்கர், “இஸ்லாமியர்களின் உணர்வைப் புண்படுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம். இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதை மத்திய அரசு கைவிட வேண்டும். மக்களை பிரித்து அரசியல் ஆதாயத்தைப் பெற வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரும் இந்த சட்டத்தைக் கைவிடாவிட்டால் நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார்.