மோசடி புகாரில் சிக்கிய ரியல் எஸ்டேட் அதிபர் சென்னையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து மனைவி மாமனாருடன் உளுந்தூர் பேட்டையில் தற்கொலை செய்து கொண்டார்.

உளுந்தூர்பேட்டை நகர் ரெயில்வே கேட் அருகே ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் இன்று காலை ரெயில் தண்டவாளத்தில் ஒரு பெண் மற்றும் 2 ஆண்களின் உடல்கள் சிதைந்த நிலையில் கிடந்தன. இதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பிணமாக கிடந்த வாலிபர் பேண்ட், சர்ட்டும், மற்றொருவர் வேட்டி, சட்டையும் அணிந்திருந்தனர். பலியான பெண் சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார்.

போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சோதனையிட்டனர். இறந்து கிடந்தவர்கள் அருகே கிடந்த கைபேக்கில் ஆதார் கார்டு இருந்தது. அதில் போடி நாயக்கனூர் திருமலைபுரம் பகுதியை சேர்ந்த சகாயபால் மார்லன் மேத்யூ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கைப்பையில் இருந்த செல்போனில் பதிவாகி இருந்த எண்களுக்கு போலீசார் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது தண்டவாளத்தில் பிணமாக கிடந்தது சகாயபால் மார்லன் மேத்யூ (வயது 43), அவரது மனைவி சாந்தினி (37), மாமனார் சாமுவேல் செல்லையா (65) என்று தெரிய வந்தது.

சகாயபால் மார்லன் மேத்யூ சென்னை நெற்குன்றத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ரியல் எஸ்டேட் அதிபர் என்றும் கூறி வந்துள்ளார்.

அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பது போல் காட்டி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், கல்லூரிகளில் படிக்க சீட் வாங்கி தருவதாகவும் கூறி பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றி உள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில் சென்னை பீர்க்கங்கரணை போலீஸ் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார். கடந்த 16-ந் தேதி சகாயபால்மார்லன் மேத்யூவை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். மறுநாள் வரும்படி போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர் மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு வரவில்லை. 

இந்த நிலையில் சகாய பால்மார்லன் மேத்யூ தனது மனைவி மற்றும் மாமனாருடன் ரெயில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுத்தவர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக சகாயபால்மார்லன் மேத்யூ மனைவி மற்றும் மாமனாருடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.