மீனவர் சுட்டுக் கொலை…செல்போன் டவரில் ஏறி இளைஞர்கள் போராட்டம்
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரத்தில் 5 மீனவர்கள் செல்போன் டவர்மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை அடுத்த 6 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர், தனுஷ்கோடி அருகே ஆதம்பாலம் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது சராமாரியாக துப்பாக்கியால் சுட்டனர், மேலும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், ஒரு மீனவர் படுகாயமடைந்தார். இந்த தாக்குதலுக்கு அஞ்சி மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர்.
மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை சுட்டுக் கொல்லப்பட்ட மீனவரின் உடலை வாங்க மறுத்து மீனவர்கள் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே 5 மீனவ இளைஞர்கள் அங்குள்ள செல்போன் டவரில் ஏறி அங்கிருந்து குதிக்கப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக அங்குவந்த போலீசார் அவர்களை டவரில் இருந்து இறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.