தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்னென்ன என்பது குறித்து வருமான வரித்துறையினர் அளித்த பஞ்சநாமாவை செய்தியாளர்கள் முன் வெளியிட்டார் ராம மோகன ராவ்.

வருமான வரித்துறை சோதனையைத் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ராமமோகன் ராவ் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, என் வீட்டில் ரொக்கப் பணம் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய் மட்டுமே இருந்தது. அதைத் தான் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் என் மகள் மற்றும் மனைவிக்கு சொந்தமான 42 சவரன் தங்க நகைகளை வருமான வரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.

வெள்ளி நகைகளில் வெள்ளி விநாயகர், வெங்கடேஸ்வரா, லட்சுமி ஆகியவை உட்பட சுவாமி சிலைகள் தான் கைப்பற்றப்பட்டன. என் மீது சந்தேகம் இருந்தால், என்னை பணியிட மாற்றம் செய்துவிட்டு என் வீட்டில் சோதனை நடத்தியிருக்க வேண்டும். தலைமைச் செயலகத்துக்குள் சோதனை நடத்த தமிழக முதல்வரிடம் அனுமதி பெறப்பட்டதா…?

எனக்கு பணியிட மாறுதலுக்கான உத்தரவை வழங்க தமிழக அரசு தயங்குகிறது. சோதனை வாரண்டுக்கான பட்டியலில் என் மகன் பெயர்தான் உள்ளது. சோதனை நடத்த மகனின் பெயரில் அனுமதி வாங்கிவிட்டு, என் வீட்டில் சோதனை நடத்தியது எப்படி.

நான் என்ன தவறு செய்தேன். அவர்கள் இப்படி நடந்து கொண்டார்கள். நான் என்ன தீவிரவாதியா? என்னிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி சோதனை நடத்தினார்கள்.

என்னுடைய மருமகள் பேறுகாலத்துக்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில், என் வீட்டிலும், மகன் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.

32 ஆண்டுகாலம் அனுபவம் உள்ள ஒரு அதிகாரியை இப்படித்தான் நடத்துவதா? என் மீதான புகாருக்கு ஆதாரமுள்ளதா?

முதல்வர் ஜெயலலிதாவிடம் நான் பல ஆண்டுகளாக பயிற்சி பெற்றுள்ளேன். புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா தான் என்னுடைய தலைவி. தமிழகம் முழுவதும் நான் பொது மக்களை நேரில் சந்திப்பேன். இந்த அரசில் எந்த அதிகாரிக்கும் மரியாதை இல்லை என்று கூறினார்.