இராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை நீங்கள் சொன்னாதான் விடுவிப்பார்கள் - மத்திய அரசுக்கு திருமா வேண்டுகோள்...
காஞ்சிபுரம்
இராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
அதன் பின்னர், அவர் செய்தியாளர்களிடம், "பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது உள்ளிட்ட மக்கள் விரோதச் செயலைக் கண்டித்து திமுக, காங்கிரசு, விசிக, மதிமுக, இசுலாமிய கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்தப் போராட்டங்கள் அனைத்தும் மக்கள் நலன் சார்ந்தவை. கிளர்ச்சி என அரசு நினைக்கக் கூடாது. எனவே, எதிர்க் கட்சிகளின் தொடர் போராட்டங்களை மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களாக அரசு கருத வேண்டும்.
மக்கள் பிரச்சனைகளை விட மத்திய அரசின் செயல்பாடுகளை நிறைவேற்றும் போக்கினை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
இராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
தமிழ்த் தாயை அவமதித்த விஜயேந்திரர் தமிழக மக்களிடையே வெளிப்படையாக மன்னிப்பு கோரவேண்டும்.
பன்னாட்டு மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தினால் தமிழக மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். எனவே, இந்தப் பிரச்சனையை பிரதமர் மோடி சர்வதேச சமூகப் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்" என்று கூறினார்.