ரஜினிகாந்த் தமிழகத்தைவிட்டு வெளியேற வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் ஆவேசம். என்னடா இது ரஜினிக்கு வந்த சோதனை...
திருவாரூர்
காலா படத்திற்காக காவிரியை கர்நாடகாவிற்கு அடகு வைத்தால் ரஜினிகாந்த் தமிழகத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆவேசத்துடன் தெரிவித்தார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், "உச்ச நீதிமன்றம், தமிழக விவசாயிகளின் நிலையை அறிந்து காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் செயலாளர், கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து ஆணையத்திற்கான உறுப்பினர் கொடுப்பதை சட்டத்திற்கு புறம்பாகவும், காவிரி தீர்ப்பிற்கு முரணாகவும் காலக்கெடு கொடுத்துள்ளார்.
மேலும், முல்லை பெரியார் அணை விவகாரத்தில் மூன்றாவது துணை குழுவிற்கு அனுமதி கொடுத்ததும் கண்டிக்கத்தக்கது.
வருகிற 15-ஆம் தேதி பிரதமரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவுள்ளார். அதுவரை காலம் கடத்தாமல் அமைச்சர்கள் கொண்ட குழுவினை டெல்லிக்கு அனுப்பி ஆணையத்தை அமைத்து, கர்நாடகாவில் இருந்து தண்ணீரை பெற்று வருகிற 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று தமிழக மக்களின் கருத்துக்கு எதிராக கமல் பேசுவதும் அதற்கு ரஜினி ஆதரவு தெரிவிப்பதும் கண்டனத்திற்கு உரியது.
ரஜினிகாந்த், கமல் ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்களோ? என்ற சந்தேகம் வருகிறது.
காலா படத்திற்காக காவிரியை, கர்நாடகாவிற்கு அடகு வைத்தால் ரஜினிகாந்த் தமிழகத்தைவிட்டு வெளியேற வேண்டும்.
காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்தும், கமலும் தொடர்ந்து பேசி வருவது தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழக முதலமைச்சர் காவிரி விவகாரம் தொடர்பாக தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக கமல், ரஜினி இருவரும் செயல்பட்டால் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவோம்" என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.