Rajinikanth and Kamal loss if their enter in politics - Nanchil sampat

திருவண்ணாமலை

ரஜினியும், கமலும் அரசியலுக்கு வருவது அவர்களுக்குத்தான் இழப்பு என நாஞ்சில் சம்பத் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் பங்கேற்றார்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாஞ்சில் சம்பத், "பேருந்துக் கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை மற்ற மாநிலங்களின் பேருந்துக் கட்டணத்தோடு ஒப்பிடுவது தவறான செயலாகும்.

அரசு பேருந்துகளைச் சேவை மனப்பான்மையுடன் இயக்க வேண்டும். பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து அனைத்துக் கட்சிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளன. குறிப்பாக மாணவ சமுதாயம் போராட்டத்தில் குதித்துள்ளது. இதனால், மீண்டும் மெரீனா புரட்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, தினகரன் அணி சார்பிலும் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் ஜனவரி 30-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தமிழக ஆளுநர் ஆங்காங்கே ஆய்வு நடத்துவது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும். இதனை அனைத்துக் கட்சிகளும் எதிர்த்து வருகின்றன.

ரஜினியும், கமலும் அரசியலுக்கு வருவது அவர்களுக்குத்தான் இழப்பு" என்று அவர் தெரிவித்தார்.