சுற்றுலா வழிகாட்டி கைது! குரங்கணியில் 36 பேரை மலையேற்றத்துக்கு அழைத்து சென்ற ராஜேசிடம் விசாரணை!
தேனி, காட்டுத்தீ விபத்தில் 36 பேரை மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேசை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியின் கொழுக்கு மலைக்கு திருப்பூரில் இருந்தும் சென்னையில் இருந்து 26 பெண்கள், 8 ஆண்கள், 3 குழந்தைகள் உள்பட 40 பேர் இரு குழுக்களாக சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னை, பாலவாக்கத்தில் இயங்கி வந்த சென்னை ட்ரெக்கிங் கிளப் மூலமாக மலையேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.
மலையேற்றத்துக்குப் பிறகு இவர்கள் திரும்பும்போது, காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். காட்டுத்தீயின் தாக்கத்தால், ஒன்றாக வந்தவர்கள், தனித்தனியாக பிரிந்து சென்றுள்ளனர். அதில் இதுவரை 27 பேர் லேசான மற்றும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த நிலையில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதுவரை மீட்கப்பட்டவர்கள் அனைவரும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மலையேற்றம் சென்ற சென்னையைச் சேர்ந்த 6 பேரும், ஈரோட்டைச் சேர்ந்த 3
பேரும் தீயில் கருகி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீயில் இருந்து தப்பிக்க உயிரிழந்த 9 பேரும் அங்கிருந்த மிகப் பெரிய குழியில் குதித்ததால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்து ஏற்பட அரசிடம் முறையான அனுமதி பெறவில்லை என்றும் அப்படி அனுமதி பெற்றிருந்தால் அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களாகவே மலையேற்றத்தில் ஈடுபட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மலையேற்ற பயிற்சியி ஈடுபட காரணமாக இருந்த சென்னை ட்ரெங்கிங் கிளப் மூடப்பட்டது. அந்த நிறுவனத்தின் பெயர்பலகைகளும் அகற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், குரங்கணி காட்டுத்தீ விபத்தில் 36 பேரை மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ராஜேசிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.