rain with Hurricane winds in Krishnagiri 7 goats dead due to wall fell down...

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததில் சுவர் இடிந்து விழுந்ததில் கொட்டகைகளில் கட்டப்பட்டு இருந்த 7 ஆடுகள் இடிபாடுகளில் பரிதாபமாக உயிரிழந்தன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் வெயிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. 

அதன்படி, நேற்று மாலை சாரல் மழை பெய்தது. கிருஷ்ணகிரி நகரில் லேசான சாரல் மழை பெய்தது. சூளகிரியில் இடி - மின்னலுடன் மழை பெய்தது. 

இதேபோல, மத்தூர் சுற்று வட்டாரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மத்தூர் அருகே கௌண்டனூரில் பழனியம்மாள் என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்கொட்டகை சுவர் இடிந்து விழுந்தது. 

இதில், கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 7 ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன. இதனைக் கண்டு பழனியம்மாள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய் ஆய்வாளர் பாரதி, கால்நடை மருத்துவர் எத்திராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதேபோன்று, மழை காரணமாக ஓசூர், சூளகிரியில் நேற்று இரவு திடீரென மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர்.

நேற்று மாலை நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில் அதிகபட்சமாக 19 மில்லி மீட்டர் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.