Asianet News TamilAsianet News Tamil

நாளை வரை மழை இருக்கு - எங்கெல்லாம் தெரியுமா...?

rain travel to tomorrow in tamilnadu
rain travel to tomorrow in tamilnadu
Author
First Published Mar 17, 2018, 12:51 PM IST


வடதமிழகத்திலும் தென் தமிழகத்திலும் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சில இடங்களில் மிதமான மழை விட்டு விட்டு பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கன்னியாகுமரி அருகே நிலைகொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக நேற்று முந்தினம் தென் தமிழகத்தில் கன மழை வெளுத்து வாங்கியது. 

இதில் தூத்துக்குடி மாநகர பகுதியில் 62 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 200 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தூத்துக்குடி மாநகரில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் சுமார் 2 அடி உயரத்துக்கு தேங்கியது.

இதைதொடர்ந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல இடங்களில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய,விடிய கொட்டித் தீர்த்தது.

கிழக்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து, ஈரப்பதமான கடற்காற்று வீசுகிறது. இந்த காற்று, தென் மாநிலங்களில் சந்திப்பதால், தமிழகத்தில் பல இடங்களில், இன்று பரவலாக மழை பெய்யலாம் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில், இன்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, வடதமிழகத்திலும் தென் தமிழகத்திலும் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சில இடங்களில் மிதமான மழை விட்டு விட்டு பெய்யும் எனவும் தெரிவித்தார். 

கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூரில் 8 செமீ அளவும் ஓமலூரில் 7 செமீ அளவும் மழை பெய்துள்ளது.   தென்கிழக்கு அரபிகடல் பகுதியில் கர்நாடகத்தை ஒட்டி வளிமண்டல பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் குறிப்பிட்டார். 

மேற்கு மற்றும் கிழக்கு திசை காற்று சந்திப்பதால் நாளை வரை தமிழகத்தில் மழை பெய்யும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios