"இன்னும் 24 மணிநேரத்தில் கனமழை" - வானிலை ஆய்வு மையம் தகவல்
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால், கடும் வெயில் அவதிப்பட்டு வந்தமக்கள் தற்போது, சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வட ஆந்திர கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மாலை அல்லது இரவில் கன மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 5 செமீ மழையும், வால்பாறையில் 4 செமீ மழையும், நுங்கம்பாக்கம், பெரியாறு, நடுவட்டத்தில் தலா 3 செமீ மழையும், வாணியம்பாடி, ஆலங்காயம், போச்சம்பள்ளி பகுதியில் 2 செமீ மழையும் பதிவாகியுள்ளது என கூறப்பட்டுள்ளது.