இரயில் நிலையங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் - மதுரை கோட்ட இரயில்வே நிர்வாகம் அதிரடி உத்தரவு…
மதுரை
இரயில் நிலையங்களில் பயணிகள், குப்பைகள், எச்சில் துப்புபவர்கள், வெற்றிலை, பாக்கு, புகையிலை, பான் பொருள்களை துப்புபவர்களுக்கு ரூ.500 அபராதமும், சிகரெட் குடிப்பவர்களுக்கு ரூ.200 அபராதமும் வசூலிக்கப்படும் என்று மதுரை கோட்ட இரயில்வே நிர்வாகம் அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
மதுரை கோட்ட இரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
“இரயில் நிலையங்களில் தானியங்கி நகரும் படிக்கட்டுகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பயணிகள் தங்கும் அறை, காத்திருக்கும் அறை, குளிரூட்டப்பட்ட கட்டண காத்திருப்பு அறை, பேட்டரி கார் வசதி, சக்கர நாற்காலி வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவைகளை செய்து அசத்தி வருகிறது.
இதில், சுகாதார பணிகளை தனியார் ஒப்பந்தகாரர்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கணிசமான தொகையையும் இரயில்வே துறைச் செலவழித்து வருகிறது.
இதனிடையே, இரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி, “இரயில் நிலையங்கள், இரயில் நிலைய வளாகங்கள், இரயில் பெட்டிகள் ஆகியவற்றில் சுகாதாரத்தை பேண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மதுரை கோட்ட இரயில்வே முதுநிலை வர்த்தக மேலாளர் அரிகிருஷ்ணன் கூறியது:
“இரயில்வே வாரிய உத்தரவுப்படி, இரயில் நிலையங்கள், இரயில் நிலைய வளாகங்கள், இரயில் பெட்டிகள் ஆகியவற்றை சுத்தமாக வைப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தனிப்படையினர் மதுரை கோட்ட இரயில்வேக்கு உள்பட்ட அனைத்து இரயில் நிலையங்களிலும், இரயில் பெட்டிகளிலும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களை கண்டறிந்து உடனுக்குடன் அபராதம் விதிப்பர்.
அதன்படி, “குப்பைகள், உணவு பண்டங்களை கீழே போடுபவர்கள், எச்சில் துப்புபவர்கள், வெற்றிலை, பாக்கு, புகையிலை, பான் பொருள்களை துப்புபவர்களுக்கு ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும். சிகரெட் குடிப்பவர்களுக்கு ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும்”.
குப்பைகளை குப்பை தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். இரயில் நிலையங்கள், இரயில் நிலைய வளாகங்கள், இரயில் பெட்டிகளில் சிகரெட் பிடிக்கக்கூடாது ஆகியன குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் பயணிகளும் நோய் தாக்குதலுக்கு ஆளாகாமல் பாதுகாக்கப்படுவர்” என்று அவர் கூறினார்.