சென்னை வந்தார் ராகுல் காந்தி...!! கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக இரண்டாவது முறையாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கருணாநிதியின் உடல் நலம் குறித்து மருத்துவமனைக்கு வந்து விசாரித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தார்.இதையொட்டி பலத்த பாகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ப.சிதம்பரம்,திருநாவுக்கரசர், இ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்த ராகுல்காந்தியை திமுக வின் முக்கிய தலைவர்கள் உள்ளே அழைத்துச் சென்றனர்.
சற்று நேரத்தில் வெளியே வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தான் கருணாநிதியை சந்தித்ததாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.அவரை நேரடியாக சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவிக்க வந்தததாக கூறினார். இதனையடுத்து அவர் டெல்லி புறப்பட்டச் சென்றார்.
ராகுல் காந்தி சென்னையில் வைத்து கருணாநிதியை இப்போதுதான் முதன்முறையாக சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.