lawrence protest for Neduvasal

களத்தில் குதிக்கிறார் ராகவா லாரன்ஸ்….நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று உண்ணாவிரதம்…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்தை ஆதரித்து, நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பூமியில் இருந்து ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை எதிர்த்து கடந்த 14 நாட்களாக நெடுவாசலில் பொது மக்கள்,விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக திரையுலகைச் சேர்ந்தவர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வரலாறு காணாத அறப்போராட்டத்தில் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

போராட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு உணவும் அளித்தார். பொது நலன் தொடர்பாக எங்கு போராட்டம் நடைபெற்றாலும் அதில் நான் இருப்பேன் என்று லாரன்ஸ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்