மதுராந்தகம் நகராட்சிப் பகுதிகளில் 21 பேரை வெறி நாய்கள் கடித்துக் குதறியதில் பலத்த காயம் அடைந்து அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட ஒத்தவாடை தெரு, சின்ன காலனி, கடப்பேரி, வன்னியர் பேட்டை போன்ற பகுதிகளில் தெருவில் நடந்துச் சென்ற சூசைநாதன் (72), ராமமோகன் (40), தனபால் (49), ஷர்மிளா (7), லாவண்யா (23), பிரகாஷ் (28), குமார் (40), புவனேஸ்வரி (38) உள்ளிட்ட 21 பேரை நாய்கள் வெறித்தனமாய் கடித்துக் குதறியுள்ளன. இதனால் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

பாதிக்கப்பட்ட 21 பேரும் மதுராந்தகம் அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். முதலில் நாய் கடிக்கான தடுப்பு ஊசி போடப்பட்டது. இன்னும் இரண்டு ஊசிகள் போட்ட பிறகே அவர்களின் உடலில் விஷம் ஏறியுள்ளதா என்பதை சொல்ல முடியும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். 

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் எத்தகைய நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

21 பேரை வெறி நாய்கள் கடித்த சம்பவத்தால் இந்தப்பகுதி மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.