சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது கடந்த திங்கட்கிழமையன்று காவல் துறையினர் திடீரென தடியடி நடத்தியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மெரினாவிற்கு வரும் பாதைகள் அடைக்கப்பட்டதால், மாணவா்கள் மெரினா கடற்கரைக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால்
சில இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடந்தேறின.

சுமூகமாக முடிவடைய வேண்டிய பிரச்சனையில், போலீசார் திடீரென தடியடி நடத்தி, வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைத்த சம்பவங்கள் வைரலாகி பரவி வருவதைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் ஜனநாயகம் செத்துவிட்டதாகவே கருதத் தோன்றியது.
தொடர்ந்து மெரினா பகுதியில் பதற்றம் நிலவியதால் அங்கு காவல் துறையினர் யாரையும் அனுமதிக்கவில்லை.கடந்த 3 நாட்களாக கடற்கரை வெறிச்சோடிக்காணப்பட்டது.மேலும் காமராஜர் சாலையில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.
அவ்வழியே போலீஸ் மற்றும் அரசு வாகனங்களைத் தவிர வேறு எந்த ஒரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மீனவர்களும்,குடியிருப்புவாசிகளும் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
மேலும் குடியரசு தினத்தையொட்டி ராணுவ அணிவகுப்பு மரியாதைக்காக ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றதாலும் காமராஜர்சாலை வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று பிற்பகலில் காமராஜர் சாலை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. மேலும் மெரினா கடற்கரைக்கு பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
