உடற்கூராய்வுக்கு லஞ்சம் கேட்கும் அரசு மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து போராடியவர்கள் கைது...
கரூர்
உடற்கூராய்வுக்கு லஞ்சம் கேட்கும் அரசு மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 11 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
"முறையான சிகிச்சை அளிக்காமல் மாற்றுத்திறனாளி ஜி.வெங்கடேசின் மரணத்திற்கு காரணமான செவிலியர்கள் கார்த்திக், பானு மற்றும் இரவு நேரப் பணியில் இருந்த மருத்துவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்,
உடற்கூராய்வுக்கு லஞ்சம் கேட்கும் அரசு மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டிப்பது" கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று காலை கரூர் அரசு மருத்துவமனையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கரூர் மாவட்டத் தலைவர் டி.நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். ஆர். பிரசாத், மணிகண்டன், பார்த்தீபன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைச் செயலாளர் ஸ்டாலின், முன்னாள் மாவட்டத்தலைவர் எம். ஜோதிபாசு, முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் முத்துச்செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பின்னர் திடீரென அரசு மருத்துவமனைக்குள் சென்று முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு நகர காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரையும் கைது செய்தனர்.