மதுரை, சிதம்பரத்தில் கொட்டும் மழை…மனம் தளராமல் உறுதியுடன் போராட்டக்களத்தில் இளைஞர்கள்…
மதுரை, சிதம்பரம் புதுச்சேரி, கடலுார், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்களும்,மாணவர்களும் நடத்தி வரும் போராட்டம் அடாத மழையிலும் விடாது தொடர்ந்து வருகிறது. கொட்டும் மழையில் நனைந்து கொண்டே அவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக சளைக்காமல் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
உச்சநீதிமன்றம் தடை விதித்ததன் காரணமாக ஜல்லிக்கட்டு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என வலியுறுத்தி களமிறங்கிய இளைஞர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும், இதற்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 16 ஆம் தேதி அலங்காநல்லுரில் தொடங்கிய இந்த போராட்டத் தீ தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவி வருகிறது.இதற்கு பொதுமக்களும் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உணர்ச்சிகரமாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் மிலிட்டரி கட்டுப்பாட்டுடன் நடைபெற்று வருகிறது. குப்பைகளை அவர்களே அகற்றி வருகின்றனர். இயற்கை உபாதைகளுக்கு மிகவும் சிரமப்பட்டாலும் உறுதியுடன் அவர்கள் களத்தில் நிற்கிறார்கள்.
கோவை, திருப்பூர், நெல்லை,திருச்சி என அனைத்து இடங்களிலும் போராட்டம் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளது. ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும் என போராட்டகாரர்கள் உறுதியுடம் உள்ளனர். சிறு குழந்தைகள் கூட மிகுந்த தன்னம்பிக்கையுடன் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர், தஞ்சை-பட்டுக்கோட்டை, கோபிசெட்டிபாளையம், அறந்தாங்கி, புதுச்சேரி, அரியலுர், பெரம்பலுர் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக புதுச்சேரியில் கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. ஆனாலும் மழைக்கு அசராத இளைஞர்கள் கூட்டம் தொடர்ந்து அறவழியில் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர்.
மதுரையில் இன்று அதிகாலை பெய்யத் தொடங்கிய மழை போராட்டக்கார்களை கொஞ்சமும் அசைத்துப்பார்க்க முடியவில்லை. மழையையே வந்து பார் என சவால் விட்டுக் கொண்டு கொட்டும் மழையிலும் அசையாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்கள், குழந்தைகள்,முதியோரும் மழையில் நனைந்து கொண்டே உற்சாகமாக முழுக்கங்கள் எழுப்பி வருகின்றனர். மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் மழைநீர் தேங்கியிருந்தாலும் நின்று கொண்டே போராடி வருகிறார்கள்.
எதையும் எதிர்பார்க்காத இந்த இளைஞர்கள் கூட்டத்தின் போராட்டம் வெற்றிபெரும் நாள் வெகு துரத்தில் இல்லை…
