பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிர்ப்பு - மாதனூரில் மறியல் போராட்டம்
சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் ஜெயலலிதாவுன் தோழி சசிகலா ஏக மனதாக அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலமைச்சர் ஓபிஎஸ், அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.
இதனையடுத்து ஓபிஎஸ், தம்பிதுரை ஆகியோர், பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தீர்மானத்தை போயஸ்கார்டனில் இருந்த சசிகலாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதனை ஏற்றுக் கொண்ட சசிகலா தீர்மான நகலை ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு முன்வு வைத்து வணங்கினார். அதிமுக வின் புதிய பொதுச் செயலாளராக வரும் ஜனவரி 2 ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார் என தெரிகிறது.
இந்நிலையில் கழக பொதுச் செயலாளராக சசிகலாவை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி, வேலுர் மாவட்டம் ஆம்பூர் அருகே அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாதனுர்- ஒடுக்கத்துர் சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர், இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.