"விவசாயிகள் வறட்சியால் சாகலையா? எங்க ஊருக்கு வாங்க காட்டுறோம்.." - அமைச்சரை விரட்டியடித்த பொதுமக்கள்
தமிழகத்தில் விவசாயிகள் வறட்சியால் சாகவில்லை என தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்க,ல செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் அமைச்சர் எம்.சி.சம்பத்தை விரட்டியடித்தனர்.
தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் விவசாயிகள் வறட்சியால் சாகவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகத்தான் இறந்தார்கள் என்றும் கூறப்பட்டு இருந்ததது.
இது தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் விவசாயிகளும் பொது மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் முதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக திருப்பாதிரிப்புலியூர் அண்ணா பாலம் சிக்னல் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருந்தனர்.
இது குறித்த தகவல் அமச்சர் எம்.சி.சம்பத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ரயில்வே மேம்பாலம் வழியாக தப்பிச் சென்றார்.
ஆனால் அமைச்சர் வேறு வழியாக செல்வதை அறிந்த விவசாயிகள் அவரை விரட்டிச் சென்று கறுப்புக் கொடி காட்டினர்.
அமைச்சர் சம்பத் கடலூர் மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அவருக்கு கறுப்புக் கொடி காட்டுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்