பள்ளிக்கு அருகில் செயல்படும் தனியார் மதுபானக் கூடம்; குடிகாரர்களால் மாணவிகள், ஆசிரியைகள் அச்சம்...
தேனி
தேனியில் அரசுப் பள்ளி அருகே செயல்பட்டு வரும் தனியார் மதுபானக் கூடத்தால் மாணவிகள் மற்றும் ஆசியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் அதனை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்சியரிடத்தில் மனு அளித்தனர்.
தேனி மாவட்டத்தில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ந.வெங்கடாசலம் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்திற்கு ஏராளமான மக்கள் வருகைத் தந்து தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் ப.நாகரத்தினம் மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், "தேவதானப்பட்டியில், அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ள பகுதி அருகே தனியார் மதுபானக் கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பள்ளி உணவு இடைவேளையின்போதும், பள்ளி முடிந்த பின்பும் வீட்டிற்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு மதுபானக் கூடம் முன் நிற்கும் கும்பலால் பல்வேறு வகையில் இடையூறும், மன உளைச்சலும் ஏற்படுகிறது.
எனவே, அரசு விதியை மீறி பள்ளி அருகே செயல்பட்டு வரும் தனியார் மதுபானக் கூடத்திற்கு தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.