தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பை தடுக்க வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை…
திருவண்ணாமலை
தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைப்பெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது.
இதற்கு செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் கிருபாகரன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் வி.ஜெயராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். செய்யாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சத்தியமூர்த்தி வரவேற்றார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், “தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுங்கட்டூர் - பூதேரி புல்லவாக்கம் சாலையில் அமைக்கப்பட்டு வரும் சிறுபாலம் அமைக்கும் பணியை விரைவுபடுத்திச் சாலையை உடனடியாக சீர்படுத்திட வேண்டும்.
வேலூரில் இருந்து வந்தவாசி செல்லும் தனியார் பேருந்து புதேரி புல்லவாக்கம், சிறுங்கட்டூர், அரும்பருத்தி ஆகிய பகுதியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடம் எண் 134 செய்யாறு - காஞ்சிபுரம் பேருந்தை பழையபடியே அதிகாலையில் இயக்க வேண்டும்.
பில்லாந்தி ஏரி மதகை சீரமைக்க வேண்டும்.
இரும்பந்தாங்கல் ஏரி மதகுகளை பராமரித்து பாசனத்துக்கு உதவிட வேண்டும்.
புகார் தெரிவிக்க வசதியாக செய்யாறு வேளாண் மருந்துக் கடைகளில் வேளாண்மை அலுவலர்களின் செல்லிடப்பேசி எண்களை எழுதி வைக்க வேண்டும்.
சுமார் 54 அடி அகலமுள்ள பெரிய காழியூரான் கால்வாய், ஆக்கிரமிப்பின் காரணமாக தற்போது சுமார் 20 அடி மட்டுமே உள்ளது. எனவே, கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
அளத்துரை கிராமத்தில் சுமார் 45 ஏக்கரில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை ஏரியில் 30 ஆண்டுகளாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தங்கள் குறைகளை கோரிக்கையாக வைத்தனர்.
இக்கூட்டத்தில் அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனக்காவூர் கு.உதயகுமார், செய்யாறு பா.காந்திமதி, எஸ்.வி.மூர்த்தி, கால்நடை மருத்துவர் அண்ணாதுரை, மின்வாரிய செயற்பொறியாளர் அருள்செல்வன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.