prisoner attempt suicide by cutting his neck with knife

விழுப்புரம்

விழுப்புரத்தில் மனைவியை கம்பியால் தாக்கிவிட்டு சிறைக்கு சென்ற கைதி தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள தென்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார்(31). இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரின் மனைவி விஜயகுமாரி (29).

குடிபோதைக்கு அடிமையான சம்பத்குமார் கடந்த சில மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதி சம்பத்குமார் சாராயம் குடிக்க பணம் தருமாறு தனது மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு விஜயகுமாரி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த சம்பதகுமார் வீட்டில் இருந்த இரும்புக் கம்பியால் விஜயகுமாரியை பலமாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர், இதுகுறித்து விஜயகுமாரி கொடுத்த புகாரின்பேரில் அனந்தபுரம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து, சம்பத்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து செஞ்சி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறையில் இருந்த சம்பத்குமார் திடீரென கழிவறையில் இருந்த இரும்பு வாளியால் கழிவறை டைல்ஸ் கல்லை உடைத்து எடுத்து தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். இதனால் அவருடைய கழுத்தில் இருந்து இரத்தம் கொட்டியது. இதில் வலி தாங்க முடியாமல் அலறிய சம்பத்குமாரை சிறைக்காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து கிளை சிறை அலுவலர் சரவணன் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து சம்பத்குமாருடன் சிறையில் தங்கி இருந்த கைதிகளிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், கடந்த சில நாட்களாக சம்பத்குமார் தனது மனைவியே தன்னை சிறைக்கு அனுப்பிவிட்டதாக சக கைதிகளிடம் கூறி புலம்பி வந்தது தெரிந்தது. மேலும், அவர் தன்னை மனைவி சிறைக்கு அனுப்பிவிட்டாரே என விரக்தியடைந்து தற்கொலைக்கு முயன்றதும் தெரிந்தது.

மனைவியை தாக்கிவிட்டு சிறைக்கு வந்த கைதி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கைதிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.