தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிப்பது ரத்தாக போகுது! லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிச்சுட்டாங்களே...
கோயம்புத்தூர்
தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வரும் 7-ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் கலியபெருமாள், செயலாளர் முருகேசன் ஆகியோர் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், "சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை விலை நிலவரத்திற்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்துகொள்ளும் அதிகாரத்தை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.
டீசல் மற்றும் பெட்ரோல் விலையை நாள்தோறும் உயர்த்திக் கொண்டே போவதால் லாரி உரிமையாளர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறோம்.
ஓட்டுநர்கள் பற்றாக்குறை, சுமைகள் குறைவு, டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் லாரித் தொழில் நசிந்து வருகிறது. எனவே, மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள நாள்தோறும் விலை நிர்ணயம் செய்துகொள்ளும் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி) வரிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும்.
காப்பீட்டு நிறுவனங்கள் லாரிகளுக்கான பிரீமியத் தொகையை உயர்த்துவதால் பாதிக்கப்பட்டுள்ளோம்.
எனவே, வாகன காப்பீடூ கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து அனைத்து மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் 7-ஆம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளது.
இதற்கு வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.