குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பிரார்த்தனை....!
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பிரார்த்தனை....!
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் விரைவில் பூரண நலன்பெற இறைவனை பிரார்த்திப்பதாக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் காய்ச்சல், சிறுநீரகத் தொற்று காரணமாக கடந்த 60 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சைகள் காரணமாக உடல் நலன் தேறிவந்தார். இந்நிலையில், நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதய மற்றும் சுவாசவியல் நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட செய்தி அறிந்ததும் தமிழக ஆளுநராக பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டு வந்து அவரை சந்தித்து, மருத்துவர்களிடம் உடல் நிலை குறித்து கேட்டுச் சென்றார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியும் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு முதல்வரின் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைச்சர் ஜே.பி. நட்டா ஆகியோரும் தொலைபேசி வாயிலாக மருத்துவர்களிடம் முதல்வரின் உடல்நிலையை கேட்டறிந்தனர்.
இந்நிலையில், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரின் உடல்நிலை தேறி பூரண குணமடைய இறைவனிடம் தொடர்ந்து பார்த்திக்கிறேன் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதே போல காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியும், முதல்வர் ஜெயலலிதா முழுமையாக குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும், மத்தியஅமைச்சர்கள் வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன் ஆகியோரும் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தேறிவர பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தனர்.