தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி இன்று 6வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதில், சாலை மறியல், ரயில் மறியல், உண்ணாவிரதம், கடையடைப்பு உள்பட பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் நடிகர் சங்கத்தினரும் பங்கேற்று, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிடிலயில், நடிகர் பிரகாஷ்ராஜ், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலக்கு சென்றார். அங்கு தரிசனம் முடிந்து அவர், தனது குழந்தையை தூக்கி கொண்டு வெளியே சென்றார்.
அப்போது, அங்கிருந்த டிவி நிருபர்கள், அவரை சூழ்ந்து கொண்டு பேட்டி எடுத்தனர். அப்போது, தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி குறித்து, நடிகர் பிரகாஷ்ராஜிடம் கருத்து கேட்டனர்.
அதற்கு, “நான் சாமி கும்பிட வந்திருக்கிறேன். ஜல்லிக்கட்டு பற்றி கருத்து சொல்ல முடியாது. கோவிலுக்கு வந்த என்னை ஏன் தொல்லை செய்கிறீர்கள்" என கூறிய அவர், திடீரென கேள்வி கேட்ட நிருபரை தாக்கினார். மேலும் அவர், நிருபரிடம் இருந்த கேமராவை பறித்து அதிலிருந்த வீடியோ பதிவுகளை அழிக்க முயன்றார்.
இதை பார்த்த மற்ற நிருபர்கள், அவரை மடக்கி பிடித்து சமாதானம் செய்து, அழைத்து சென்றனர். இச்சம்பவம் திருப்பதி பத்திரிகையாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
