பவர் ஸ்டாருக்கு சிக்கல் - நீதிமன்றம் பிடிவாரண்ட்
பவர் ஸ்டாருக்கு சிக்கல் - நீதிமன்றம் பிடிவாரண்ட்
தொடர்ந்து வழக்கில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்ததால் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நீதிமன்றம் பிடி ஆணை விதித்துள்ளது .
(டி.என்.எஸ்) கடன் வாங்கிக் கொடுப்பதாக கூறி பல கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாகக் கூறி கைது செய்யப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.
பிறகு ஜாமீனில் வெளியான அவர், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தனது நண்பரான சேலத்தை சேர்ந்த தொழிலதிபர் அர்த்தநாரியிடம் ரூ.5 லட்சம் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. தான் பெற்ற கடனுக்காக, நடிகர் சீனிவாசன் தலா ரூ.1 லட்சம் என 5 செக்குகளை அர்த்தநாரியிடம் வழங்கியுள்ளார்.
அந்த செக்குகள் வங்கிகள் பணம் இருப்பு இல்லை என செக் திரும்ப வந்துள்ளது. இது தொடர்பாக சீனிவாசனிடமிருந்து சரியான பதில் இல்லாததால், சேலம் 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அர்த்தநாரி.
இந்த வழக்கு நேற்று மாஜிஸ்திரேட்டு கணேசன் முன்னிலையில் 'செக்' மோசடி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் சீனிவாசன் ஆஜராகததால், நீதிபதி அவருக்கு பிடி ஆணை பிறப்பித்து போலீசாருக்கு உத்தரவிட்டார்.