மேட்டூர்‌ அனல்‌ மின்‌ நிலையத்தில்‌ நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3 அலகுகளிலும்‌ மின்‌ உற்பத்தி நிறுத்தம்‌ செய்யப்பட்டுள்ளதால்‌, மின்‌ பற்றாக்குறை ஏற்படும்‌ அபாயம்‌ உள்ளது. 

சேலம்‌ மாவட்டம்‌, மேட்டூரில்‌ முதல்‌ பிரிவில்‌ தலா 210 மெகா வாட்‌ திறன்‌ கொண்ட நான்கு அலகுகளும்‌, இரண்டாவது பிரிவில்‌ 600 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட ஒரு அலகும்‌ என இரண்டு அனல்‌ மின்‌ நிலையங்கள்‌ செயல்பட்டு வருகின்றன. இவற்றின்‌ மூலம் தினமும் 1,440 மெகாவாட்‌ மின்சாரம்‌ உற்பத்தி செய்யப்படுகிறது.

இதனால் 840 மெகாவாட்‌ அனல்‌ மின்‌ நிலையத்திற்கு 12,000 டன்‌ நிலக்கரியும் 600 மெகாவாட்‌ அனல்‌ மின்‌ நிலையத்திற்கு 14 ஆயிரம்‌ டன்‌ நிலக்கரியும் நாளொன்றுக்கு தேவைப்படுகிறது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நிலக்கரி பற்றாகுறை காரணமாக, மேட்டூர்‌ அனல்‌ மின்‌ நிலையத்தில்‌ சுமார்‌ 7 ஆயிரம்‌ டன்‌ அளவுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது. 

இதனால்‌ முதல் பிரிவில் உள்ள 840 மெகாவாட்‌ அனல்‌ மின்‌ நிலையத்தில்‌ 2,3,4 ஆகிய 3 அலகுகளில்‌ மின்‌ உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முதலாவது அலகில்‌ மட்டும்‌ 210 மெகாவாட்டிற்கு பதிலாக 160 மெகாவாட்‌ அளவுக்கு மட்டுமே மின்‌ உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று இரண்டாவது பிரிவில்‌ 600 டன் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 340
மெகாவாட் அளவிற்கு மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதால், மின் தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையி இதுக்குறித்து பேசிய அனல் மின் நிலைய தொழிற்சங்க நிர்வாகிகள், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் நிலையத்தில் உள்ள அலகுகள் அவ்வப்போது நிறுத்தி இயங்குவதால்,பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை அனல் மின் நிலைய நிர்வாக சந்தித்து வருவதாகவும் இந்த நிலைக்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் குற்றச்சாட்டியுள்ளனர். 

மின்‌ உற்பத்திக்காக மேட்டூர்‌ அனல்‌ மின்‌ நிலையத்திற்கு நாளொன்றுக்கு மத்திய நிலக்கரி தொகுப்பில்‌ இருந்து சுமார்‌ 12 ஆயிரம்‌ டன்‌ அளவுக்கு ரயில்‌ மூலம்‌ நிலக்கரி வரவேண்டும்‌, மத்திய அரசிடம்‌ போதுமான அளவுக்கு நிலக்கரி கையிருப்பு இருந்தும்‌ தமிழக அரசியல்‌ காழ்ப்புணர்ச்சி காரணமாக நிலக்கரியை அனுப்பாமல்‌ காலம்‌ தாழ்த்தி வருவதாக அனல்மின்‌ நிலைய தொழிற்சங்க நிர்வாகிகள்‌தெரிவித்துள்ளனர்‌.