பாம்புகளை காப்பாற்றிய பூனம் சந்த் மரணம் - பாம்பு கடித்து உயிரிழந்தாரா?
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பூனம் சந்த். அப்பகுதியில் யார் வீட்டிலாவது பாம்பு புகுந்து விட்டால் முதலில் அழைக்கப்படுபவர் பூனம் சந்த்.
பாம்புகளின் மீதுள்ள ஆர்வத்தால் பாம்புகளை பாதுகாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வந்தார். அதற்காக, பணம் வாங்காமல் பாம்பு பிடிப்பதை ஒரு சேவையாகவே செய்தார் பூனம் சந்த்.
வீடுகளில் புகுந்த நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் போன்ற அதிக விஷமுள்ள பாம்புகள் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை காப்பாற்றி, அடர்ந்த காட்டில் விட்டுள்ளார்.
விபத்தில் அடிபடும் பூனை, நாய் போன்றவற்றையும் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர் பராமரித்துள்ளார்.
கடலூர் பாம்பு மன்னன் என அழைக்கப்படும் பூனம்சந்த், இன்றும் ஒரு அலுவலகத்தில் புகுந்த பாம்பை பிடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார்.
பாம்பு கடித்து உயிரிழந்தாரா ? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.