வண்டலூர்,

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வர்தா புயலால் வண்டலூர் பூங்காவில் சாய்ந்து விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் பூங்கா திறக்கப்படவில்லை. காணும் பொங்கலை கொண்டாட வண்டலூர் பூங்கா சென்றவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான நேற்று காணும் பொங்கல் அனைத்து இடங்களிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலை கொண்டாட பொதுமக்கள் பலர் குடும்பத்துடன் சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கூடினர்.

ஆனால் கடந்த மாதம் வீசிய ‘வார்தா’ புயலில் வண்டலூர் பூங்காவில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. சேதம் அடைந்த பூங்காவை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

சீரமைப்பு பணிகள் இன்னும் முழுமை அடையாததாலும், தேங்கி கிடக்கும் மரக்கழிவுகளால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாலும் பொங்கல் பண்டிகைக்கு பூங்கா திறக்கப்படாது என பூங்கா அதிகாரிகள் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளனர்.

இதை அறியாமல் சென்னை மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் காணும் பொங்கலை கொண்டாட நேற்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆர்வமுடன் வந்தனர்.

ஆனால் பூங்காவின் நுழைவு வாயில் கதவு பூட்டி இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பூட்டி இருந்த கதவில், ‘வார்தா’ புயல் சேதங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் பூங்காவுக்குள் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை” என்று பலகை வைத்து இருப்பதை கண்டு அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பெரும்பாலானவர்கள் அருகில் உள்ள கோவளம், மாமல்லபுரம் கடற்கரை நோக்கி படையெடுத்தனர்.