Political parties condemn and hunger strike abuse in Co-operative Society union election
அரியலூர்
அரியலூரில் உள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டித்து தி.மு.க மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே தேவாமங்கலத்தில் பருத்தி மற்றும் பட்டு நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்கம் உள்ளது.
இந்தச் சங்கத்தில் நிர்வாக குழுத் தேர்வில் போட்டியிடுவதற்காக 33 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இதற்கான தேர்தலை நடத்தாமல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை தேர்தல் அலுவலர் ஒட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பல்வேறு அரசியல் கட்சியினர், கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த வலியுறுத்தியும், முறைகேடுகளை கண்டித்தும் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு சாமியானா பந்தல் அமைத்து அதில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளர் மணிமாறன் தலைமை வகித்தார்.
இந்தப் போராட்டத்தில் ம.தி.மு.க., காங்கிரசு உள்ளிட்ட அரசியல் கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்று கூட்டுறவு சங்க தேர்தலில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவிட்டனர்.
