polio pulse camp
இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது…மக்களே மறக்காமல் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுங்க…
தமிழகத்தில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இன்று இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகின்றன. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 43,051 சொட்டுமருந்து மையங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தம் 43,051 சொட்டுமருந்து மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த சொட்டுமருந்து வழங்கும் மையங்கள், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். அனைத்து ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், கடந்த 2-ம் தேதி முதல் தவணை போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்பட்டது. இரண்டாம் தவணை, இன்று சொட்டுமருந்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாள்களுக்கு முன் சொட்டுமருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாள்களில் மீண்டும் சொட்டுமருந்து கொடுக்க வேண்டும். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாள்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.
சொட்டுமருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு, இடது சுண்டு விரலில் மை வைக்கப்படுகிறது. இது, விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவுகிறது. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க, தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், முகாம் நாளன்று போலியோ சொட்டுமருந்து வழங்கப்படும்.

போலியோ சொட்டுமருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக, முக்கியப் பேருந்து நிலையங்கள், சுங்கச் சாவடிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1652 பயண வழி மையங்கள் நிறுவப்பட்டு, சொட்டுமருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கப்பட உள்ளது.
போலியோ சொட்டுமருந்து முகாமில், சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள்.
எனவே பொது மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு மறக்காமல் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
