police took woman to the investigation and attacked women association protest

திருவாரூர்

திருவாரூரில் விசாரணைக்கென அழைத்து சென்று, பெண்ணை சரமாரியாக தாக்கிய காவல் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு பெண்ணை, விசாரணைக்காக அழைத்து சென்றபோது காவல் அதிகாரி ஒருவர் அடித்துள்ளார். பெண்ணைத் தாக்கிய காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு இந்திய மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தமயந்தி தலைமை வகித்தார். 

இதில், ஒன்றியத் தலைவர் தமிழ்செல்விராஜா, ஒன்றியச் செயலாளர் குருமணி, ஒன்றிய துணைச்செயலாளர் சுஜாதா, ஒன்றியக்குழு உறுப்பினர் புவனேஸ்வரி உள்பட 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 

இந்த போராட்டத்தில், "பெண்ணைத் தாக்கிய காவல் அதிகாரி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி மறியலில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர். 

இதுகுறித்து தகவல் அறிந்த துணை காவல் கண்காணிப்பாளர் இனிக்கோதிவ்யன், ஆய்வாளர் ஆனந்தபத்மநாதன், உதவி ஆய்வாளர் கபிலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதில், "உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்த பின்னரே சாலை மறியலை கைவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

மாதர் சம்மேளனத்தின் இந்தப் போராட்டத்தால் திருத்துறைப்பூண்டி பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.