எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக கூறி ரூ. 65 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் போலீஸ் உதவிக்கமிஷனர் உள்பட 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை நொளம்பூரைச் சேர்ந்தவர் லட்சுமணன். தமிழக போலீசில் உதவிக் கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயபால் என்பவர் தனது மகனை எம்பிபிஎஸ் படிக்க வைப்பதற்காக முடிவு செய்துள்ளார். 

அப்போது நண்பர் ஒருவர் மூலமாக ஓய்வு பெற்ற போலீஸ் உதவிக்கமிஷனர் லட்சுமணன் அறிமுகமாகியுள்ளார். அப்போது எம்பிபிஎஸ் சீட்டுக்காக ஜெயபால் ரூ.65 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை மருத்துவ சீட் வாங்கி தரவில்லை. 

இதனால் மருத்துவ சீட்டுக்கு கொடுத்த பணத்தை லட்சுமணனிடம் ஜெயபால் கேட்டுள்ளார். அதற்கு முறையாக லட்சுமணன் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஜெயபால் புகார் அளித்தார். போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளாததால் லட்சுமணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜெயபால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததாக தெரிகிறது. 

இதனையடுத்து கோர்ட் மோசடியில் ஈடுபட்ட லட்சுமணனை கைது செய்ய உத்தரவிட்டதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று காலையில் நொளம்பூரில் வசித்து வந்த லட்சுமணனை கைது செய்தனர். மேலும் இந்த மருத்துவ சீட்டு மோசடியில் ஈடுபட்ட பார்த்தசாரதி என்பவரையும் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெய்ல் பீஸ்: இந்த மோசடியில் தற்போது உதவி கமிஷனராக இருக்கும் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மீது ஏனோ நடவடிக்கை வரவில்லை.